Sunday, February 23, 2014

இன்றொரு தகவல் - ஆஹா கல்யாணம்!



பல ஆண்டுகளுக்கு முன் யாம், இளைஞனாய் இருந்த போது, புதிய காலிப்பர் (பூட்ஸ் )  அளவு கொடுக்க சென்னை கே.கே.நகர் அரசினர் முடநீக்கு மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். அளவு எடுக்கக் கூடியவர் வர தாமதம் ஆனதால், காத்துக் கொண்டிருந்தோம். அது சமயம் மாற்றுத்திறனாளியான ஒரு இளம் பெண் தன் பாட்டியுடன் புதிய காலிப்பர் அளவு கொடுக்க வந்திருந்தவர், எமக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தனர்.

நாம் தான் மாற்றுத்திறனாளிகளின் சேவையில் இருக்கிறோமே, காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வாய் சும்மா இருக்குமா? மெதுவாக அவர் பெயர், படிப்பு, ஊனத்தின் தன்மை என இப்படி பேச்சு நீண்டுக் கொண்டிருந்த நேரத்தில், இருவரும்  மெதுவாக எழுந்து எம் அருகில் வந்து அமர்ந்து கொண்டு சகஜமாக உரையாடினார்கள். எம் தொழில், சேவைப் பற்றிய தகவல்களையும் சொல்லிக் கொண்டே வந்த சமயத்தில், அவர் திருமணத்தைப் பற்றியும் விசாரித்தோம்.

அவர்களும், மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம், இவள் திருமணம் செய்ய தயங்குகிறாள், மணமகளை பார்க்க வருகிறவர்களும், இவள் மாற்றுத்திறனாளியாக  இருப்பதால் திருமணம் செய்துக் கொள்ள தயங்குகிறார்கள் என பாட்டி தெரிவித்தார். இவர் தான் நன்கு படித்திருக்கிறார், காலிப்பர் அணிந்துக் கொண்டு ஊன்றுக் கோளில்லாமலே நடக்கிறார், அப்படியிருக்கையில் என்னவாம் என்று யாம் வினவி விட்டு, அடுத்து வேறு விஷயம் பேச துவங்கினேன். அது சமயம் பாட்டி, சாதாரணமாக விசாரிப்பது போல, எம் திருமணம் பற்றி கேட்டார். திருமணம் முடிந்து குழந்தைகளும் இருக்கிறார்கள் என யாம் கூறிய சில நொடிகளில், பாட்டி எதுவும் பேசாமல் வெடுக்கென்று எழுந்து செல்ல, பேத்தியான அவ்விளம் பெண்ணும் பாட்டியை தொடர்ந்து எழுந்து செல்லவும், ஓ... அளவு எடுக்கக் கூடியவர் வந்து விட்டார் போலும் என யாம் நினைத்து, அந்த அறை வாசலை பார்வையிட்டோம். யாரும் வந்ததைப் போலவோ, வருவதைப் போல்வோ  தெரியவில்லை.

எதிர் நீள் இருக்கையின் வேறு முனைக்கு  சென்று, யாம் பேச முடியா அளவுக்கு முகம் திருப்பி அமர்ந்துக் கொண்டார்கள். அளவு எடுக்கிறவர் வந்ததும், தனித்தனி மறைப்புகளுக்கு நாங்கள் அளவு எடுக்க செல்ல, அவருக்கு பின் , எமக்கு அளவு எடுத்தார். எம்மைத்தாண்டி சென்றபோதும் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் சென்று விட்டனர். பிறகு சிந்தித்து பார்த்த போதுதான் தெரிந்தது, அவர்கள் அவ்வளவு நெருக்கமாக அமர்ந்து பேசியது, மாப்பிள்ளை பார்க்கத்தான் என்று. அவர்களின் முகத்தை மீண்டும் நினைத்து பார்த்த போதுதான், அவர்களின் ஏமாற்றத்தை அப்பட்டமாக உணரமுடிந்தது. பாவம் அவர்கள்.   அவ்விளம் பெண்ணுக்கும் திருமணம் முடிந்து பாட்டியாகும் நிலை அடைந்திருப்பார்.

நினைவுக்கு வந்தது, பதித்து விட்டோம். ஒரு வேளை அவர் இதை படிக்க நேர்ந்தால், நினைவுக்கு வரலாம். அவர் நலமாக வாழ எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.