Thursday, August 15, 2013

தோன்றுகிறதோ புதிதாய்?



சென்னையில் ஓரிரு நாட்கள் தங்கி சில நண்பர்களை சந்தித்து விட்டு வரவே திட்டமிட்டிருந்தோம். ஆனால் எம்முடன் துணைக்கு வந்த நண்பர் உடனடியாக ஊர் திரும்ப வேண்டும் என கூறியதால், திட்டங்களை மாற்றிக் கொண்டு 10ம் தேதி இரவே ஊர் திரும்ப முடிவு செய்து புறப்பட்டோம். புகைவண்டியில் இடம் பதிவு செய்யயியலவில்லை. உடன் எடுத்து சென்ற மூன்று சக்கர மோட்டார் வண்டி இருந்ததால் பேருந்திலும் திரும்பயியலாது. எனவே முன்பதிவில்லா பயணசீட்டை வாங்கி, ஒரு முன்பதிவில்லா பயணப்பெட்டியில் ஏறினோம்.
இருக்கைகளும் நிரம்பி, பேட்டியின் மீதி இடைவெளிகளிலும் பயணிகள் நிரம்பியிருக்க, நாங்களும் இருக்கின்ற இடத்தை பகிர்ந்துக் கொள்ள ஏறினோம்.

ஆனால் அங்கு நிகழ்ந்த நிகழ்வை என்னவென்று கூற. மூன்று பயணிகளுடன் சில ஆண் பெண் பயணிகள், அதிலும் இரண்டு பெண்களின் சொற்பிரயோகம் அதிர்ச்சி அளித்தது உண்மையே.

உங்களுக்காத்தான் ஊனமுற்றோர் பெட்டியென தனியாக ஒதிக்கி இருக்கிறார்களே, அங்கே போய் ஏறிக்கொள்ளுங்கள். முதலில் இங்கிருந்து இறங்குங்கள் என்று, குழாயடி சண்டைப்போல உயர்ந்த குரலில் திரும்ப திரும்ப கூறியது ஒருவித அருவருப்பையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது.

இருப்பினும் எமது கோபத்தையும், உரிமையையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஒன்றுமே தெரியாதவரைப்போல, அம்மா, போர்ட்டர் இந்த பெட்டியில் ஏற்றிவிட்டதால் ஏறிக்கொண்டு விட்டோம். வண்டி புறப்படும் நேரமும் ஆகிவிட்டது. எனவே இறங்கி எங்களுக்கு உரிய பெட்டியில் ஏறவும் முடியாது. அடுத்த முறை கவனித்துக் கொள்கிறேன் என கூறி அமைதியாகி விட்டோம். இருப்பினும் அப்பெண்மணியும் அவருடன் பேசிய ஆண்களும் முணுமுணுத்துக் கொண்டே ஏறினார்கள்.

இதை பிரிவு என்பதா? தீண்டாமை என்பதா? என்னவென்று கூற.

* மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில், மற்ற பயணிகளும் ஏறிக் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் பயணிக்கவும், ஏறியிறங்கவும் மிகவும் சிரமத்தைக் கொடுப்பதால், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காவல்காரரோ அல்லது வண்டியில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளோ, அப்பேட்டியில் ஏற அனுமதிப்பதில்லை. அதில் பாதிக்கப்பட்டதின் கோபமோ இவர்களுக்கு எனவும் எமது எண்ணத்தில் ஒரு நிழலோடியது.



இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.


--
உங்கள்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: