Monday, December 24, 2012

அனுபவங்கள் பல.3

அனுபவங்கள் பல.3

இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

எங்கள் கடைக்கு கிருத்துவ மதத்தைத் தழுவிய சிங் (பஞ்சாப்காரர் ) வாடிக்கையாளராக இருந்தார். எங்கள் மீது மிகுந்த வாஞ்சைக் கொண்டவராக திகழ்ந்தார். ஒவ்வொரு முறையும் கடைக்கு வருகைத் தரும்போதெல்லாம், அவர் இல்லத்திற்கு அவசியம் வர வேண்டும் என அழைப்பு விடுப்பார். 

அவரின் அழைப்பை தவிற்க இயலாமல், எங்கள் வருகையை முன்கூட்டியே அறிவித்து விட்டு, அவர் இல்லத்திற்கு சென்றோம். எங்களை குடும்பத்துடன் வரவேற்றார்கள். நலன் விசாரிப்புகள் தொடர்ந்துக் கொண்டிருந்த போதே, எங்கள் வேண்டுகோளையும் புறந்தள்ளி, பஞ்சாப் மாநில இனிப்பு கார வகைகளையும், பழரசத்தையும் பரிமாறினார்கள். ருசி பார்த்து விட்டு, புறப்பட எண்ணிய போது, சிறிது நேரம் அமருங்கள், உங்களுக்காக எங்கள் ஆண்டவரிடம் பிராத்திக்கிறோம் என்றார்கள். அவர்கள் அன்பினை மீறமுடியாமல், ஏற்றுக் கொண்டோம்.

அவரும் அவர் மனைவியும் எங்கள் இருவரின் தலை மீது கைகளை வைத்தபடி, வாயிக்குள் மெதுவாக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தவர்கள், நேரம் செல்ல செல்ல, உச்ச ஒலியில் அவர்களின் உடல் முழுமையும் ஆட, ( சாமி வந்து ஆடுவது போல ) மிக மிக வேகமாக பிரார்த்தனை செய்தார்கள். சிறிது சிறிதாக வேகம் குறைந்து, சகஜமான நிலைக்கு வந்து, சிறிது நேரம் கழித்து பின் விடைப் பெற்று கிளம்பும் போதும், வரவேற்றது போலவே வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

வாழ்விலே மறக்க முடியாத சம்பவமும், குடும்பமும் ஆகும்.


எவன் சிறுகுழந்தையைப் போல பணிவுடையவனோ, அவனே பரலோகத்தில் பெரியவனாக மதிக்கப் பெறுவான் - இயேசுநாதர்

No comments: