Monday, July 15, 2013

ஆனந்தம் - இன்றொரு தகவல்.



நேற்று ஒரு இடத்திற்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பும்போது, ஒரு சாலை சந்திப்பில் சிக்னலில் நின்றுக் கொண்டிருந்தோம். அப்போது திடிரென்று ஒருவர் சாலையைக் கடந்து, ஐயா நலமா என கேட்டார். சில நொடிகளில் அவரை நினைவிற்கு கொண்டு வந்து, இப்பொழுது தான் நீங்கள் நல்ல தோற்றத்துடன் இருக்கிறீர்கள் என்றேன்.

அவரும்,, தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. குடியை நிறுத்தி விட்டேன் என்றார். சிக்னல் கிடைக்க மீண்டும் பார்ப்போமென மகிழ்வுடன் விடைப்பெற்று கொண்டோம். நினைவுகள் பின்னோக்கி ஓடியது. யான் எப்பொழுதும் தனியாக வண்டியில் பயணம் செய்யும் போதும் (அவசிய பணிகள் இல்லாத சமயங்களில்) பேருந்துக்காக தனியாக காத்திருக்கும் நபர்களை, யான் செல்லவிருக்கும் இடத்திற்கு இடைப்பட்ட இடமாக இருப்பின் இலவசமாக அழைத்து சென்று உதவுவது என குறிக்கோளாக செயல்பட்டு வருகிறோம். அதுபோல சில மாதங்களுக்கு முன் இவரையும் இப்படி அழைத்து சென்றோம். அழுக்கு உடையுடனும், போதையிலும் இருந்தார்.

அவர் கீழே விழுந்து விடுவாரோ என்ற நினைப்பிலும், அவரிடம் பேசவும் மெதுவாக வண்டியை இயக்கியபடி பேச்சுக் கொடுத்து, அவர் கட்டிட மேஸ்திரி என்பதையும், வீடு இல்லா நிலையையும் குடும்ப சூழ்நிலையையும் அறிந்துக் கொண்டோம். குடியை நிறுத்த வேண்டிய அவசியத்தையும், பணியில் அவரைப் போன்றவர்களின் செயல்பாடுகளையும் விளக்கி, மீண்டும் எம்மை எங்கு சந்தித்தாலும் நீங்களாக பேசுங்கள் என அறிவுரைக் கூறி அனுப்பினேன்.

நேற்று எம்மை, எதிர்பாராத வகையில் மீண்டும் அவராக வந்து சாலை சந்திப்பில் பேசியதுடன், போதையில் இல்லாமலும், நல்ல உடையுடன் காண நேர்ந்ததும், எமது பிரச்சாரத்தினால் இவரை போதைப் பிடியிலிருந்து மீட்க முடிந்ததே என்ற மகிழ்வுடன் ஒரு உத்வேகமும் ஏற்பட்டது.


# # குடி குடும்பத்தை அழிப்பதுடன், உங்கள் கௌரவத்தையும் (மரியாதையையும்) அழித்து விடும்.


இனிய மாலை வணக்கம் நண்பர்களே!


No comments: