Monday, October 14, 2013

அனுபவங்கள் பல


எதேதோ எப்படி எப்படியோ எழுத நினைக்கிறேன். அதனால் சில விசயங்கள் விடுபட்டு விடுமோ என்ற ஒரு கலக்கமும் தோன்றுகிறது. ஆமாம் பெரிய சரித்திர சம்பவங்கள், விடுபட்டு விட்டால் பிற்கால சந்ததியருக்கு முழுமையான சரித்திரம் தெரியாமல் போய்விடும்பார் என நீங்கள் கிண்டல் அடிப்பதும் உணர்கின்றேன். ஆனாலும் என்ன செய்ய, எழுதவும் துவங்கி விட்டேனே, உங்களை படிக்கவும் செய்து விட்டேன். எல்லாம் நம் தலையெழுத்து. சரி சொல்ல வந்ததுக்கு போவோமா? இப்பொழுதுதான் உயர்னிலைப்பள்ளி  வாழ்க்கை நிலைக்கே எழுத வந்திருக்கிறேன். இதற்குபின் கல்லூரி, திருமணம், தொழில் இப்படி எழுத நீண்டுக் கொண்டே போகும் இந்த நேரத்தில், சமிபத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் மறந்து விடுமோ என்ற எண்ணம் எற்ப்பட்டதால், அவ்வப்போது இந்த வருட நிகழ்ச்சிகளையும் எழுத நினைத்துவிட்டேன்.

 

ஆஹா, 2009 ம் வருடம் பிறக்கப் போகிறது, டைரி எழுத ஆரம்பித்து விட வேண்டுமென நினைத்தபடி, புத்தாண்டும் பிறந்தது,  பொங்கல் நெருங்குகிற நேரத்தில் நண்பர் சரவனன் ஒரு டைரியை பரிசளித்தார். அவருடைய நினைவு இருக்க, அதில் ஆட்டோகிராப் கேட்டேன். தேவையில்லையென அவர் மறுக்க, நானோ பிடிவாதமாய் இன்று இல்லாவிடினும் பிறகு எழுதி கொண்டுவாருங்களென, டைரியை திருப்பி அவரிடமே கொடுத்து அனுப்பி விட்டேன். ஒரு மாதமாகியும் கொடுக்காததால், நானே கேட்டேன். வேறோரு நண்பருக்கு கொடுத்து விட்டேனென அப்பொழுது சொன்னார். டைரியும், எழுத நினைத்த என்னுடைய எண்ணமும் போனது போனதுதான். ஒரு வழியாக இந்த பதிவு முலமாகவே அவ்வப்போது பதித்து விடுவது என முடிவு செய்ததின் ஆரம்பம்தான் இது.
 
பால் பொங்கல், சக்கரைப்பொங்கல், வடை,அத்திரசம்,பாயாசம் செய்து ஒரு நாள் பொங்கல் கொண்டாடினோம். சென்னை மாநகருக்கு குடிபெயருவதற்கு முன், எங்கள் வீட்டில் நான்கு நாட்களும் பால் பொங்கலும் சக்கரை பொங்கலும் செய்வார்கள். திகட்ட திகட்ட சாப்பிடுவோம். ஆனால் இங்கு குழந்தைகளின் உணவு விருப்பத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதால் ஒரு முறை மட்டுமே பொங்கலென ஆகிவிட்டது. முக்கியமான நிகழ்வுகளாக இந்த 2009 ஜனவரி கடைசியில் தான். அதை அடுத்ததில்.....

No comments: