Wednesday, December 3, 2008

நண்பர்களை அறிமுகப்படுத்தி விட்டுதான் அடுத்த தகவலுக்கே போகவேண்டும். அடுத்த நண்பி பெங்களூரை சேர்ந்த குமாரி.மாலதி. இவரைப் பற்றி சுவாரிஸ்யமான தகவல்கள் பல இருக்கின்றன. இவரும் எனக்கு முன்பாகவே மருத்துவமனையில் சேர்ந்தவர். என்னைவிட சேலம் மாநகரை சேர்ந்த மறைந்து விட்ட டாக்டர். ஸ்ரீதர் அவர்களின் மகன் அசோக் மிகவும் நெருங்கிய நண்பன். ஏனென்றால் இருவரும் கன்னடத்துக்காரர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனியாக அமர்ந்து கன்னடமொழியில் பேசிக்கொண்டே இருப்பார்கள்.சரி மாலதி விசயத்துக்கு வருவோம்.அவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என நினைக்கிறேன். நண்பர்களாக இருந்தவர்களுடைய குடும்ப சூழ்நிலைப் பற்றி அதிகம் தெரியாது. அதைப்பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வமோ வயதோ இல்லை. மிகவும் சூட்டிகையானபெண். வார்டன் அம்மாவின் செல்லமான கவணிப்பில் சிலர் இருந்தார்கள்.ஏனென்று தனியாக அவரை பற்றி எழுதும் போது தெரிவிக்கிறேன். அவர்களில் முதலிடம் மாலதிக்கு தான். அவர் தற்போது பெங்களூருவில் ஏதோ ஒரு இந்தியன் வங்கியில் பணிபுரிவதாகவும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த ஊனமுற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்டு பல பதக்கங்கள், பரிசுகள் பெற்றிருப்பதாகவும் வாரயிதழ் ஒன்றிலும், ''தினமலர்'' நாளிதழில் 'சொல்கிறார்கள்' என்ற தலைப்பின் கீழும் செய்தி வந்துள்ளது. அதையும் எடுத்து வைத்துள்ளேன். மருத்துவம் செய்துக் கொள்ள பெங்களூரூ வழியாக மைசூரைத் தாண்டி கிருஷ்ணராஜசாகர் என்ற ஊர் வரை காலையில் சென்று அன்று இரவே ஊர் திரும்பியதால், நினைவிலிருந்தும், விசாரித்துதான் பார்க்கச் செல்லவேண்டிய சூழ்நிலையில் இருந்ததால் நட்பை புதிப்பித்துக் கொள்ள முடியாத வருத்ததுடன் இருக்கிறேன். விளையாட்டுகளில் ஆர்வமிருந்தாலும் போட்டிகளில் கலந்துக் கொள்ளாமல் நான் ஒதுங்கியதற்கு இவர் அறியாமலே இவரும் ஒரு காரணமாக இருந்துவிட்டார். அதற்காக இவரை குறைச்சொல்லமாட்டேன். காரணம் அந்த வார்டன் அம்மா தான். நான் முதலும் கடைசியுமாக கலந்துக் கொண்ட போட்டி அதுதான். ஊனமுற்றோருக்கான தினவிழா நடைப்போட்டியில் வென்ற நான், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட திரைப்பட நடிகை ''ஆச்சி'' மனோரமா அவர்களிடமிருந்து பரிசு வாங்கி என் இருப்பிடத்தில் அமர்ந்த அடுத்த நொடி என் கையிலிருந்த பரிசு பிடுங்கப்பட்டு, மாலதி வெற்றிப் பெற்றதாக அறிவித்து மீண்டும் ''ஆச்சி'' அவர்கள் மாலதிக்கு பரிசு வழங்க, அதை நாளிதழ்களிலும் வெளியிட செய்ததுடன் மருத்துவமனையிலும் பாராட்டுவிழா நடத்தினார்கள். விபரம் தெரியாததால் அவளுக்கு எந்த ஒரு குற்ற உணர்வுமில்லை.பின்னாளில் இந்த பாராட்டுவிழா தகவலும் புகைப்பட சான்றுகளே விளையாட்டில் அவருக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்குமென நினைக்கின்றேன். பாராட்டுவிழா பற்றியெல்லாம் எனக்கும் குறையாக தெரியவில்லை. என்ன பரிசு என்று பார்ப்பதற்கு முன்பாகவே பிடுங்கிக் கொண்டு விட்டார்களே என்ற ஏக்கம் தான் அன்று பெரிதாக இருந்தது. அன்றிலிருந்துதான் போட்டிகளில் கலந்துக் கொள்ளாமலே தவிர்த்து விட்டேன். அடுத்ததில் சேலம் நண்பன் அசோக் பற்றி....

No comments: