Monday, December 1, 2008

சென்னை.ஆந்திர மகிள சபாவில் அனுமதியும் முதல் நண்பர்களும்

1967 ம் வருடம் மே-ஜூன் மாதத்தில் சென்னை அடையாறு ஆந்திர மகிளசபா, ஈஸ்வர பிரசாத் தத்தாத்ரேயா முடநீக்கு மருத்துவமனையில் சேர்ந்தேன். அதே நாளில் எனக்கடுத்து மருத்துவமனையில் சேர்ந்த, ராஜபாளையம் அருணகிரி, கோபி, ராமநாதன் ஆகிய இம்முவரைப்பற்றியும் அறிமுகம் செய்யாமல் மற்றவர்களை அறிமுகம் செய்ய முடியாது. அவர்களைப்பற்றிய அறிமுகம் ஒரு சிறு கதையாகத்தான் இருக்கும். பார்ப்போமா?. 1) இவர்கள் முவ்வரும் சகோதரர்கள். 2) முதல் இருவரும் பெரியம்மை நோயினால் தாக்கப்பட்டு ஊனமுற்றவர்கள்,3) இரு பையன்களுக்கு பிறகு இரண்டு பெண்பிள்ளைகள், சொக்கதங்கம் போல் அழகு, நிறம். தவிர எந்த குறைவுமில்லாமல் இருந்தார்கள். 4)இவர்களுக்கடுத்தவன் ராமனாதன் நிறமும் அழகும் இருந்தாலும் இளம்பிள்ளைவாத நோயினால் ( போலியோவினால்) தாக்கப்பட்டவன். 5) அடுத்து பிறந்த பையனும், பிறந்ததிலிருந்தே இளம்பிள்ளைவாத நோயினால் ( போலியோவினால்) தாக்கப்பட்டதுடன், இரவு பகலின்றி ஒரே அழுகை, மருத்துவர்களின் ஆலோசனைப்படி தூக்க மாத்திரை வழங்கி வந்தவர்கள், ஒரு நாள் பெற்றோர் அடைந்த மிக்க அசதியினால், இவர்களாகவே, அவன் நன்றாக தூங்கட்டுமென்று தூக்க மாத்திரையொன்றை சேர்த்து வழங்க, நிரந்தரமாகவே தூங்கிவிட்டான்.
இம்முவரையும் ஒரே ஹாலில் எனக்கடுத்து வரிசையாக கட்டில்கள் கொடுத்திருந்தார்கள்.வீட்டு ஏக்கம் இருந்தாலும் கோயம்பத்தூர் தெலுங்குபாளையம் மருத்துவமனையில் இருந்த அனுபவத்தினால், புதிய இடத்தின் சூழ்நிலைகளை அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தினால் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பேசினாலும் என்னிடம் பேசாமல் அவர்கள் நாள் முழுவதும் ஒரே அழுகை.வகுப்புக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் பெயர் பதிவு செய்ய ஒரு வாரமாவது ஆகிவிடுவதால், அதுவரை படுக்கை தான். எங்களுடன் தங்கிருந்த மற்றவர்கள் பள்ளிக்கு சென்று விடுவர்.நாங்கள் நான்கு பேர் மட்டும் தனியாக ஹாலில் இருப்போம். எனக்கோ பொறுமை போய்விட்டது. ஓரிரு நாள், இவர்களின் அழுகையைப் பொறுத்தவன், வாயை மூடுகிறீர்களா இல்லை அடித்து உதைக்கட்டுமா என்று மிரட்டினேன். உடனே சடாரென்று அழுகையை நிறுத்தியதுடன் வாயையும் மூடிக்கொண்டார்கள். மென்மையாக சிறுகசிறுக பேசி,பிறகு நிரந்தர நண்பர்களானோம்.அவர்கள் ராஜபளையத்தில் பெரிய நூற்பாலை நடத்தி வரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை பின்னாலில் அறிந்துக் கொண்டேன். அவர்களையும் அவர்களின் பெற்றோரையும் நினைக்கும்போது அவர்களின் துயரத்தை எண்ணி இன்றும் வேதனைப்படுகிறேன். அவர்களில் ஒரு சகோதரன் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக இயற்க்கை ஏய்தி விட்டதாக அறிந்தேன். இதை பதிவு செய்யும்போது, நண்பர்களாக நான் நினைப்பவர்களையெல்லாம், மீண்டும் ஒருமுறையாவது சந்திப்போமா? என்ற ஏக்கம் ஏற்படுகிறது. மற்றவர்களை அடுத்த பதிவில்..

1 comment:

Palani said...

மிக நன்றாக உள்ளது உங்களது நினைவு அலைகள்.
இரா.சி.பழனியப்பன். இராஜபாளையம்.